Wednesday, June 8, 2011

செப்டம்பரில் ராணா படப்பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினி!



ரஜினியின் ராணா படப்பிடிப்பு மீண்டும் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது.
ராணா படப்பிடிப்பு ஆரம்பமான முதல்நாளிலேயே ரஜினிக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது. அன்று முதல் தொடர்ந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இப்போது சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் ரஜினி.
அவரது நோய்க்கான மூல காரணத்தை கண்டறிந்த சிங்கப்பூர் மருத்து நிபுணர்கள், தீவிர சிகிச்சை அளித்ததில், ரஜினி குணமடைந்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது, அது தேவையில்லை என்றாகிவிட்டது. அவரது சிறுநீரகங்கள் முழுமையான செயல்பாட்டுக்கு திரும்பிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் ரஜினிக்கு சிகிச்சை முடிந்துவிடும் என்றும், அதன் பின்னர் அவர் சிங்கப்பூரிலேயே முழுமையாக ஓய்வு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்பும் ரஜினி, செப்டம்பர் மாதம் ராணா படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அதற்கு முன்பே படப்பிடிப்பை தொடங்கும் இயக்குநர் ரவிக்குமார், ரஜினி இல்லாத சில காட்சிகளை வில்லன் சோனு சூட் மற்றும் நாயகி தீபிகாவை வைத்து படமாக்குவார் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்தப் படத்தில் ரஜினி அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிக்க திட்டமிட்டு அதற்கேற்ப காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்த காட்சிகள் மாற்றப்பட்டு, ரஜினியின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

No comments:

Post a Comment