Wednesday, June 8, 2011

தேமுதிகவினரின் தாக்குதல் தொடர்ந்தால் திமுகவில் சேர வடிவேலு முடிவு!





தேமுதிகவினர் தொடர்ந்து தனது வீடுகளுக்கு முன்பு நின்று கண்டபடி அசிங்கமாக பேசி வருவதால, இந்த நிலை தொடர்ந்தால் பேசாமல் திமுகவில் சேர்ந்து கட்சி ரீதியாக அவர்களை ஒரு கை பார்ப்பது என்ற முடிவுக்கு வைகைப் புயல் வடிவேலு வந்துள்ளதாக தெரிகிறது.
வாயால் கெடுவது என்பதற்கு வடிவேலுதான் சரியான உதாரணம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தன் மீதும், தனது நடிப்பு மீதும் வைத்திருந்த, வைத்துள்ள நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ளாமல், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தேர்தல் பிரசாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சரமாரியாக வாய்க்கு வந்தபடி பேசி பிரசாரம் செய்து வீண் வம்பில் மாட்டிக் கொண்டு விட்டார்.
இப்போது தேர்தல் முடிவு பாதகமாக வந்து விட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் தற்போது வீட்டோடு முடங்கியுள்ளார்.
மறுபக்கம் தேமுதிகவினரோ பிரச்சினையை இத்துடன் முடிக்காமல் வளர்த்துக் கொண்டே போகின்றனராம். வடிவேலு வீட்டுக்கு முன்பு திடீர் திடீரென கூடுவது, இருக்கிற கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏசுவது, தாறுமாறாக திட்டுவது என்று பொழுதைக் கழித்து வருகிறார்கள்.
வடிவேலுதான் நொந்து நூடூல்ஸாகிப் போய் விட்டாரே என்று விடாமல் தொடர்ந்து அவர்கள் அநாகரீகமாக நடந்து வருவதால் வடிவேலு கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
இதுகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்நது புலம்பியபடி வருகிறாராம் வடிவேலு. என்னைத்தான் வீட்டோடு முடக்கி விட்டார்களே, பிறகு எதற்கு தொடர்ந்து அசிங்கமாக பேசி வருகிறார்கள். இப்படியே இவர்கள் தொடர்ந்து வந்தால் நானும் பேசாமல் திமுகவில் சேர்ந்து கட்சி ரீதியாக இவர்களை ஒரு கை பார்க்க வேண்டியதுதான், வேறென்னத்த செய்ய என்று கூறுகிறாராம் வடிவேலு.
இதற்கிடையே, உலகம் என்ற படத்தில் வடிவேலு நடிக்கவிருக்கிறார். இதில் 25 வேடங்களில் அவர் வரவுள்ளாராம். இந்தப் படத்தை வெளியில் விட்டால் போதும் இழந்த செல்வாக்கை மீண்டும் பிடித்து விடலாம், அதற்குப் பிறகு பத்து விஜயகாந்த வந்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அந்தப் படம் தொடர்பான பணிகளில் படு தீவிரமாக குதித்துள்ளாராம் வடிவேலு.

No comments:

Post a Comment